Navigate / search

மாணவர்கள் கண்டுபிடித்த ஆராய்ச்சி கருவி ராக்கெட் மூலம் நிலவுக்கு அனுப்பப்படுகிறது

திருவாரூர்,

உலக அளவில் விண்வெளி ஆராய்ச்சி குறித்த டீம் இன்டஸ் என்ற அமைப்பு லேப் டூ மூன் என்ற திட்ட அறிக்கை தயாரிக்கும் போட்டியை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடத்தியது. மாணவர்களின் ஆராய்ச்சி மனப்பான்மையை வளர்க்கும் இந்த போட்டியில் உலகம் முழுவதும் உள்ள 15 நாடுகளை சேர்ந்த 3 ஆயிரம் திட்ட ஆய்வறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன. இதில் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் சந்தோஷ் ராவ்சவுத்திரி, சுகன்யா ராவ்சவுத்திரி மற்றும் அமெரிக்க அரிசோனா பல்கலைக்கழக கணினி பொறியாளர் ஆட்டம் கெல்சி கார்னருடன் சேர்ந்து நிலவில் உயிரினம் வளருமா என்பது குறித்து நுண்ணிய பாக்டீரியாவுடன் 250 கிராமுக்குள் சிறிய ஆய்வகத்தை அனுப்பி வைப்பதற்காக கண்டுபிடிக்கப்பட்ட ஆராய்ச்சி கருவி தேர்வானது.

இதுகுறித்து மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் தாஸ் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஆராய்ச்சி கருவி

பூமியில் உயிரினங்கள் வாழ்வதற்கு அடிப்படை ஆதாரமாக ஒளிச்சேர்க்கை உள்ளது. ஆனால் நிலவில் மிகக் கடுமையான பருவநிலை உள்ளதால் அதில் வாழ்வது மிகவும் கடினமானது. புவி ஈர்ப்பு மிகக்குறைவு என்பதுடன் கதிர்வீச்சு அதிகமாக இருக்கும். எனவே இதனை சவாலாக எடுத்து கொண்ட மாணவர்கள் புதிய ஆராய்ச்சியை மேற்கொண்டனர். அந்த வகையில் 100 டிகிரி வெப்பத்தை தாங்கும் சபனோ பாக்டீரியாவுடன், கண்காணிக்கும் கேமராவை, சென்சார் கருவிகளுடன் இணைத்து ஒரு சிறிய உருளை வடிவத்தில் அடைத்து நிலவுக்கு அனுப்புவது குறித்து ஆராய்ச்சி கருவியை வெற்றிகரமாக கண்டுபிடித்துள்ளனர். இந்த ஆராய்ச்சி கருவி வருகிற டிசம்பர் மாதம் ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலமாக நிலவுக்கு அனுப்பப்பட உள்ளது.

இந்த ஆராய்ச்சியின் மூலம் நிலவில் மனிதர்கள் உயிர் வாழ்வதற்கு முன்னோடியாக இருக்கும். நிலவில் ஆராய்ச்சி செய்ய முதன்முறையாக மாணவர்கள் ஆராய்ச்சி கருவி இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் உலக அளவில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் ஒரு சாதனையை படைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது இயற்பியல் துறை பேராசிரியர் ரவீந்திரன் உள்பட பலர் உடன் இருந் தனர்.

 

Leave a comment