Navigate / search

கூத்தாநல்லூரில் மோட்டார்சைக்கிள்கள் மோதல்; 3 பேர் படுகாயம்

கூத்தாநல்லூர்,

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் லெட்சுமாங்குடி மேலத்தெருவை சேர்ந்தவர் ஜீவானந்தம். இவருடைய மகன் பரணிதரன் (வயது 29). சம்பவத்தன்று இவர் மோட்டார் சைக்கிளில் லட்சுமாங்குடி கடைவீதிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிரே கூத்தாநல்லூர் கமாலியாத்தெருவை சேர்ந்த காஜாமைதீன் மகன் முகமதுஅசாருதீன் (24) என்பவர் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிளும், பரணிதரன் சென்ற மோட்டார் சைக்கிளும் நேருக்கு-நேர் மோதிக் கொண்டன.

3 பேர் படுகாயம்

இதில் பரணிதரன், முகமதுஅசாருதீன், அவருடைய மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து வந்த நாகை மாவட்டம் வடகளத்தூர் மெயின்ரோட்டு தெருவை சேர்ந்த தமிழரசன் (23) ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். இதில் முகமதுஅசாருதீன் தஞ்சையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையிலும், பரணிதரன், தமிழரசன் ஆகிய 2 பேரும் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து பரணிதரன் அளித்த புகாரின் பேரில் கூத்தாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

BY DAILY THANTHI

Leave a comment