Navigate / search

கூத்தாநல்லூர் அருகே பயிர்கள் கருகியதால் தூக்குப்போட்டு விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

கூத்தாநல்லூர்,

கூத்தாநல்லூர் அருகே பயிர்கள் கருகியதால் தூக்குப்போட்டு விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

விவசாயி

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அருகே உள்ள ஓவர்ச்சேரி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் துரைராஜ் (வயது 55). விவசாயி. இவருக்கு வைஜெயந்திமாலா என்ற மனைவியும், 2 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர். துரைராஜூக்கு ஓவர்ச்சேரியில் 2 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த 2 ஏக்கரில் துரைராஜ் சாகுபடி செய்து வந்தார். தற்போது தண்ணீர் இல்லாததால் நெற்பயிர்கள் கருகியது. இதனால் துரைராஜ் மனம் உடைந்து காணப்பட்டார்.

தூக்குப்போட்டு தற்கொலை

இந்த நிலையில் துரைராஜ் தனது மகள் மேகலாவிற்கு முதல் பிரசவத்திற்காக பலரிடம் கடன் கேட்டும் கிடைக்காததால் மேலும் மனம் உடைந்தார். நேற்றுமுன்தினம் மாலை வயலுக்கு சென்ற துரைராஜ் வீடு திரும்பவில்லை. நேற்று காலை வயலின் ஓரமாக உள்ள மரத்தில் அவர் தனது வேட்டியால் தூக்குப்போட்டு பிணமாக தொங்கியுள்ளார். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து கூத்தாநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று துரைராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் கூத்தாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a comment